Dec 12, 2017

உண்மையெல்லாம் உண்மையல்ல

உண்மையெல்லாம் உண்மையல்ல
நாம் இதுதான் உண்மையென்று நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை என்பதுதான் மிகபெரிய உண்மை.
இப்போது சொன்ன கருத்தும், சிலசமயங்களில் உண்மையில்லாமல் போய்விடலாம்.
நமது பூமியானது, நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதாகவும், சூரியனை அது ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வருவதற்கு 365.25 நாட்கள் எடுக்கிறது என்றும் நம்பி வருகிறோம். ஆனால் இந்தக் இவை எவையும் உண்மையில்லை என்கிறது நவீன அறிவியல்.
பூமி சூரியனைச் சுற்றுகிறதோ இல்லையோ, உங்கள் தலை இப்போ சுற்றுகிறதல்லவா?
எங்கேயும் போயிற வேண்டாம் தொடர்ந்து படியுங்கள் படித்து முடித்த பின் ஒரு முடிவுக்கு வரலாம்
பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோமீட்டர்களுக்கு அதிகமான வேகத்தில் சுற்றுவதோடு, சூரியனையும் கிட்டத்தட்ட மணிக்கு 100 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிக்கொண்டு வருகிறது. இந்தச் செயலில், சூரியன் ஒரு நிலையான இடத்தில் இருந்தால் மட்டுமே, பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகிறது என்றெடுக்கலாம். ஆனால், சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதில்லை. அதுவும் மணிக்கு 800 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிவேகம் அது. ஓடிக்கொண்டே இருக்கும் சூரியனைப் பூமி எப்படி ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்ற முடியும்? புரியாவிட்டால் இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
நீங்கள் ஒரு மைதானத்தில் மெதுவாக நேர்கோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பலமுறைகள் சுற்றியபடி, உங்கள் மகள் ஓடி வந்துகொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தைப் பொறுத்தவரை உங்கள் மகள் ஓடிவந்த பாதை, ஒரு 'சுருள்கம்பி' (Spring) வடிவத்தில் இருக்கும். இதுபோலத்தான் பூமியின் சுற்றுப்பாதையும் கம்பிச்சுருள் வடிவத்தில் இருக்குமேயல்லாமல், நீள்வட்டப்பாதையில் இருக்காது.
இந்தப் பேரண்டவெளியில், நாம் இந்த நொடியில் இருக்கும் இடத்துக்கு இனி எப்போதும் மீண்டும் வரவே மாட்டோம். நாம் மட்டுமல்ல, பூமியும், சூரியனும் அதிகம் ஏன், இந்தப் பால்வெளி மண்டலம்கூட, இந்த நொடியில் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வரவே போவதில்லை. அவ்வளவு விசேசம் வாய்ந்தது இந்த நொடியும், நீங்கள் இருக்கும் அமைவும். எல்லாமே அதி வேகத்தில் தங்கள் இடங்களை நீங்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன.
"வானத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பார்க்கும்போது, அதே நட்சத்திரங்களைற்றானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அப்படியென்றால் ஒரே இடத்தில்தானே இருக்கிறோம்" என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அது அப்படியல்ல. நீங்கள் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் மட்டுமல்ல, பூமியின் பல ஆயிரம் வருடங்களில், பூமி பல கோடி கிலோமீட்டர்கள் தூரம் நகர்ந்திருந்தாலும், அண்டவெளியின் பிரமாண்டத்துடனும், நட்சத்திரங்களின் தூரங்களுடனும் ஒப்பிடும்போது, அது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிஜம். அண்டவெளியின் பிரமாண்டமான அமைப்புடன் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு செமீ அளவு தூரத்தைக்கூடக் கடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் சிறிய வயதில் பார்த்த நட்சத்திரங்கள் இன்றும் அதே இடத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. நிஜத்தில் நாம் நம்பவே முடியாத தூரத்தைக் கடந்து வந்துவிட்டோம்.
என்ன புரிகிறதா?
எனக்கே இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் புரியுது உங்களுக்கு எப்படி உடனே புரியும்
நாம் உண்மையென்று நம்பும் அடுத்த பொய் இது. இதுவும் சூரியக் குடும்பம் சாந்ததுதான்.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றே நாம் நம்புகிறோம். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கும் கற்பித்து வருகிறோம். இயற்பியலில் நல்ல அறிவும், புரிதலும் உள்ளவர்களுக்கு இவை மிகவும் தவறான கூற்றுகளே!
சூரியனை எந்தக் கோள்களும் சுற்றுவதில்லை என்பதுதான் பெரிய உண்மை. குறிப்பாக வியாழக் கிரகம் சூரியனைச் சுற்றுவதே இல்லையென்று சொல்லலாம்.
"இது என்ன புதுக் குழப்பம்?"
என்னவெல்லாமோ நம்புகிறோம் அதுபோல இவற்றையும் நம்பிவிட்டோம். ஆனால், உண்மை வேறு வடிவிலானது.
புரிய வைக்க முயல்கிறேன்......!
நியூட்டனுக்குப் பின்னர் நாம் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது ஒன்று. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது வேறொன்று. ஐன்ஸ்டைனின் ஈர்ப்புவிசைக் கொள்கையின்படி, திணிவு உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்புவிசையிருக்கும். அதன் திணிவைப் பொறுத்து, அது வெளியை வளைக்கும்.
உதாரணமாக ஒரு வேட்டியின் நான்கு மூலைகளையும் நான்குபேர், அதைத் தொய்ந்து விடாமல் இறுகப் பிடித்தால், அந்த வேட்டி, ஒரு சமதளம் போலக் காணப்படுமல்லவா? அல்லது சிறுவர்கள் குதித்து விளையாடும் ட்ரம்பொலலைனையும் (Trampoline) நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இப்போ நீங்கள், "ட்ரம்பொலைன் என்றால் என்ன?" என்று என்னிடம் கேட்டால், நான் அம்பேல். அதனால், நாம் வேட்டியுடனே நின்று கொள்வோம். அது கிழிந்தாலும் பரவாயில்லை.
சமதளம்போலக் காணப்படும் வேட்டியின் மேல் டென்னிஸ் பந்து ஒன்றை விட்டால், அந்தப் பந்து இருக்குமிடத்தில் வேட்டி, சற்றுக் கீழே அமிழ்ந்து குழிபோல காணப்படுமல்லவா?
அதுபோலத்தான், சமதளமாக இருக்கும் விண்வெளியில், சூரியப் பந்து இருக்கும்போது, அது வெளியை ஆழக்குழிபோல வளைக்கும். அந்தக் குழியை நோக்கிப் பொருட்கள் இழுக்கப்படுவதையே, 'ஈர்ப்புவிசை' என்றார் ஐன்ஸ்டைன். உண்மையில் ஈர்ப்புவிசை அப்படித்தான் தொழில்படுகிறது. குறைந்தபட்சம் இப்போதுள்ள அறிவியல் அறிவுப்படி இதுதான் சரியானது. பின்னர் இதுவும் மாறலாம், யார் கண்டது?
நாம் மீண்டும் வேட்டிக்கே வரலாம். வேட்டியில் ஒரு டென்னிஸ் பந்தைப் போட்டபோது, வேட்டி அதன் திணிவுக்கேற்ப வளைந்ததல்லவா? இப்போது வேறொரு சிறிய பந்தையும் வேட்டியின் மேல் போடுவோம். இப்போது இரண்டு பந்துகளின் திணிவுக்கேற்ப வேட்டி கீழ்நோக்கி வளையும். முன்னர் ஒரு டென்னிஸ் பந்தை மட்டும் போட்டபோது, வளைந்த வேட்டியின் மையப்புள்ளி, அந்தப் பந்தின் மையத்தை நோக்கியே இருந்திருக்கும். ஆனால், இரண்டாவது பந்து வந்ததும், இரண்டின் திணிவுக்கேற்றவாறு பொது மையப்புள்ளியும் மாறும். எது அதிகத் திணிவுள்ள பந்தோ, அதற்கு மிக அருகில் பொது மையப்புள்ளி இருந்தாலும், அந்தப் பந்தின் மையத்தில், பொதுவான மையம் இருக்காது.
இப்போது, வேட்டியில் மேலும் ஒன்பது சிறிய பந்துகளைப் போடுங்கள். இப்போது வேட்டியின் மொத்த வளைவு வேறுவிதமாக மாறி, அவற்றின் மொத்தமான பொது மையப்புள்ளியும் வேறு இடத்துக்கு மாறும்.
இதுபோலத்தான் சூரியக் குடும்பமும். சூரியக் குடும்பம் என்பது சூரியன் என்னும் மிகப்பெரிய நட்சத்திரத்தையும், பல கோள்கள், உபகோள்களையும் கொண்டது. சூரியக் குடும்பம் மொத்தமும் ஒரு தனியான 'அமைப்பு' (System). இந்த அமைப்புக்கென்று மொத்தமான ஒரு திணிவு உண்டு. அந்த மொத்தத் திணிவுக்கேற்ப சூரிய அமைப்புக்கு ஒரு மையம் இருக்கிறது. அந்த மையத்தை 'பரிமையம்' (barycentre) என்கிறோம். இந்த பரிமையம் சூரியனின் மையப்புள்ளி அல்ல. அது அநேகமாகச் சூரியனுக்கு வெளியே இருக்கும். சூரியன் அதிக எடை உள்ளதாக இருப்பதால், இந்த பரிமையமும் சூரியனுக்கு அருகில்தான் இருக்கும்.
சூரியக் குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட, இந்த பரிமையத்தையே சுற்றுகின்றன. சூரியனை அல்ல. அதனால் பூமி, சூரியனைச் சுற்றிவருகின்றதென்பது உண்மையல்ல. வியாழக் கிரகம், பெரியதாகவும், அதிக எடையுள்ளதாகவும் இருப்பதால், சூரியனை அது எப்போதும் சுற்றுவதேயில்லை. சூரியக் குடும்பத்தின் கோள்கள் அடிக்கடி இடம் மாறுவதால், பாரிமையமும் மாறிக்கொண்டேயிருக்கும். சில சயங்களில். கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பரிமையம் சூரியனை ரொம்பவும் தாண்டியிருக்கும்.
இப்போது நாம் கொஞ்சம் தர்க்க ரீதியாகப் பார்த்தால், எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்று சொன்னாலும் அதுவும் உண்மையாகலாம்.
இதுவரை, நான் புரிய வைத்தது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். உங்களுக்கு இது புரியவில்கையென்றால், புரிய வைக்க முடியாமல் போன என் தவறுதான். உங்கள் தவறு அல்ல.
'இந்த உண்மை மட்டுமல்ல, எந்த உண்மையும் உண்மை அல்ல"


No comments:

Post a Comment

Thank you for your great support. Kindly follow us for more information. Share your friends.
Thank you